
இதில் கலைஞருக்கும் அவருடைய கூட்டணிக்குமே முழு வெற்றி என்பது சொல்லத்தான் வேண்டுமா? இருப்பினும் வழக்கறிஞர் சமூகத்தின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்க வைத்த கலைஞருக்கு நன்றியை தெரிவியுங்கள்.
காவல்துறை, ஆளும் கட்சிக்கு ஏவல் செய்யப் பணிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டு வருகிறது. அவர்களுக்கென அதிகாரபூர்வமாக சங்கமோ, தனி அமைப்போ கிடையாது. இருந்தும் ஒரு சில காவலர்களின், காவல் துறை அதிகாரிகளின் முயற்சியால் சங்கம் தொடங்கப்பட்டு - எங்கே சங்கம் முழுமையாக செயல்படத்தொடங்கினால் தங்களுக்கு கிடைத்த அடிமைகள், அவர்களின் உரிமைகளுக்காக போராட தொடங்கி விடுவார்களோ, தமக்கும், தமது சொத்துக்களுக்கும், தமது அரசுக்கு கிடைக்கும் பாதுகாப்பும், மற்றும் அரசியல் எதிரிகளை மிரட்டவும், பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவது இயலாததாகி விடுமோ என ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் பயந்து - அது இன்றளவும் மறைமுகமாக செயல் பட்டு வருவது தெரிந்ததே.
லஞ்சம் வாங்குவதிலாகட்டும், பொதுமக்களை அவமானப்படுத்தி அலைக்கழிப்பதிலாகட்டும், காவல்துறையை விட "வருவாய்" தரக்கூடிய துறைகள் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறை அவசரப்பணிகளின் கீழ், எந்நேரமும், எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம். காலநேரம் பாராது, இரவு பகல் பாராது, பனி வெயில் மழை என எந்நேரமும் இவர்களுக்கு அழைப்பு காத்துக்கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை .
காவலர்கள் தங்கள் மேலதிகாரிகளின் வீட்டில் எடுபிடிகளாக வேலை செய்வது, அரசியல்வாதிகளுக்கு அடியாளாக சேவகம் புரிவது போன்ற கலாச்சாரம் இன்றளவும் தொடர்வதை மறுக்க முடியுமா.
வழக்கறிஞர்களின் நிலை அப்படியா உள்ளது ? அவர்களுக்கென குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரையிலும், ஏன் தேசிய அளவிலும் சங்கம் உள்ளது. அவர்களுக்குள்ள வானளாவிய அதிகாரத்தை நடைமுறைப்படுத்த தடையேதுமில்லை என்பதே உண்மை நிலை.
காவல்துறையும் நீதித்துறையும் சமூகத்தின் இரு கண்கள் அல்லவா. ஒரு கண்ணை நோய் தாக்கினாலோ அல்லது இழந்தாலோ அது சமூகத்தின் ஊனம்தானே ? காவல்துறையை சார்ந்தவர்களின் குடும்பத்திலோ, உறவுகளிலோ வழக்கறிஞர்கள் இல்லையா ? வழக்கறிஞர் குடும்பத்தில் காவல்துறையினர் இல்லையா ? ஒருவருக்கொருவர் மதித்து,விட்டுக்கொடுத்து போனால் இதுபோன்ற வன்முறைகளை தடுக்க இயலுமே.
மக்கள் மாண்புற .... மனிதநேயம் காப்போம் ....

